Dec 30, 2011 | By: R.T.அமுதன்

சித்தர்கள் யார் ?

சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள். தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம்.

0 comments: